Tamilnadu

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த மனைவி : நாமக்கல்லில் பயங்கரம் - வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

நாமக்கல் மாவட்டம், ஏ.எஸ்.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி செல்வராணி. தையல் வேலை செய்து வரும் தங்கராஜ் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தங்கராஜ் குடித்துவிட்டு வேலையைச் சரியாகப் பார்க்காததால், மனைவி செல்வராணி வீட்டிலேயே பலகாரங்களைச் செய்து விற்று வந்துள்ளார்.

மேலும் மனைவி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்தும் தங்கராஜ் குடித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பலகாரம் செய்து கொண்டிருந்தபோது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, மனைவி செல்வராணி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை எடுத்து தங்கராஜின் தலைமீது ஊற்றியுள்ளார். இதில் வலி தாங்காமல் அலறிய தங்கராஜ் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து செல்வராணியைக் கைது செய்தனர்.

Also Read: "இவரால் காவல்துறைக்கே களங்கம்": வியாபாரியிடம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் வழக்கில் நீதிபதி கண்டனம்!