Tamilnadu

திருநங்கையான தம்பி.. வீட்டிற்கு அழைத்து வந்து கொன்ற அண்ணன் - சேலம் அருகே பயங்கர சம்பவம்!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெருந்தலையான் பட்டியைச் சேர்ந்த மூர்த்தி - பார்வதி தம்பதியரின் மகன்கள் செல்வராஜ், அசோக்குமார். அம்மா - அப்பா இறந்த பிறகு அண்ணன் தம்பி இருவரும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு அண்ணன் செல்வராஜ் வேலைக்குச் சென்று, அதில் வரும் பணத்தைக் கொண்டு தம்பியை படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் 11ஆம் வகுப்பு படிக்கும் அசோக் குமார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது தம்பியைத் தேடி அலைந்த செல்வராஜூக்கு, அவரது தம்பி செங்கல்பட்டில் உள்ள திருநங்கை காலணியில், சில திருநங்கைகளின் பாதுகாப்பில் இருப்பது தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து செல்வராஜ் செங்கல்பட்டுக்குச் சென்று, தம்பி அசோக்கிடம் பேசி சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனிடையே ஒருவாரமாக வீட்டில் இருந்த அசோக் தனது உடலில் ஏற்படும் பாலின மாற்றம் குறித்து அண்ணன் செல்வராஜிடம் பேசியுள்ளார்.

“நான் திருநங்கையாக மாறப்போகிறேன்; என்னை விட்டுவிடுங்கள்” என அண்ணனிடம் சொல்லிக்கொண்டே, துணிகளை எடுத்துவைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேற முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் இருந்த சூரி கைத்தியை எடுத்து தம்பி அசோக்கை குத்தியுள்ளார்.

இரத்தவெள்ளத்தில் கிடந்த அசோக்கை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனெவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் செல்வராஜை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இனி குடிசை மாற்று வாரியம் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!