Tamilnadu

“கெட்ட பழக்கத்தை விட்டுவிடு..” : அறிவுரை கூறிய அக்கா கணவரை கொலை செய்த இளைஞர் - சேலத்தில் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்நாத். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்குக் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரை எப்படியாவது இந்த பழக்கத்திலிருந்து மீட்டு வர வேண்டும் என கோகுல்நாத் முயற்சித்து வந்துள்ளார்.

மேலும் பாலமுருகனிடம் கஞ்சா பழக்கத்தைக் கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் அக்கா கணவர் மீது பாலமுருகன் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த கோகுல்நாத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் பாலமுருகன்.

பின்னர் கஞ்சா போதை மயக்கத்தில் சடலத்தின் அருகே ரத்தக் கறையுடன் இருந்த பாலமுருகனைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அவரை வீட்டின் தனி அறையில் அடைத்துப் பூட்டியுள்ளனர்.

இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கோகுல்நாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் பாலமுருகனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலமுருகனுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 'சந்தேக புத்தி' : மனைவி மீதே ஆசிட் வீசி கொன்ற கணவன் - சேலத்தில் கொடூர சம்பவம்!