Tamilnadu

“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.4508 கோடி ஒதுக்கீடு”: வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் வேளாண் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • விவசாயத்திற்கான இலவச மின்சார திட்டத்திற்காக ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 2 கோடியில் சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

  • சூரிய சக்தியால் இயங்கும் 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும். சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானியத்திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

  • 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு.

  • துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்றவற்றை 61ஆயிரம் டன் அளவுக்குக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது வேளாண் பணிகளை எளிதாக்க 50 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • வேளாண்மையில் சிறப்பாக பணியாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கும் திட்டத்திற்கு ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2327 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Also Read: “கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் தொடங்கப்படும்”: இயற்கை வேளாண்மைக்கு வழிவகுக்கும் புதிய அறிவிப்பு!