Tamilnadu

பெற்ற குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயற்சி.. திருநள்ளாறில் பரபரப்பை ஏற்படுத்திய தாயின் செயல்!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு வட்டத்திற்குட்பட்ட சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (36). இவருக்கு பிரியா( 26) என்கிற மனைவி ஸ்ரீசந்த் (4) விஷ்ணு இரண்டரை வயது என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

பாலமுருகன் துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா திருநள்ளாறு அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு பிரியா தனது கணவருடன் போனில் பேசியதாகவும் அப்போது ஏற்பட்ட தகராறில் வீட்டில் வைத்திருந்த விஷத்தை தனது குழந்தைகளுக்கு கொடுத்து தானும் குடித்துள்ளார்.

இது குறித்து கணவருக்கு போனில் தெரிவித்துள்ளார். உடனடியாக பாலமுருகன் அவரது சகோதரருக்கு தெரிவித்து அவர்கள் மூவரையும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக இன்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இறுதிச் சடங்கு செய்ய காசு இல்லை.." : தாத்தாவின் சடலத்தை ஃபிரிட்ஜில் வைத்த பேரன் - தெலங்கானாவில் அவலம்!