Tamilnadu
“எங்களுக்கு சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது” : மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியை சேர்ந்தவர் கணித பட்டதாரி ஆசிரியை யுவராணி. இவர் திருப்பெருமந்தூர் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கொரோனா தொற்றுகாலத்தில் மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளை திறக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் தினமும் பள்ளிக்கு ஆசிரியர்கள் மட்டுமே சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், காலையிலும், மாலையிலும் மாணவர்களின் வீட்டிற்க்கே சென்று பாடம் நடத்தி வருகின்றார். கணித ஆசிரியை யுவராணி காலை 7-30 மணி முதல் 8-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், திருப்பெருமந்தூர் அடுத்த மாத்தூர், வல்லம், வல்லக்கோட்டை ஆகிய பல கிராமங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தில் மாணவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இலவசமாக பாடம் நடத்தி வருகின்றார்.
மாணவர்களின் வீட்டிற்கு செல்லும்போது அவர்களுக்கு திண்பண்டங்களையும் வாங்கி செல்வதையும் வழக்கமாக செய்து வருகின்றார். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவ மாணவிகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க டேப் மற்றும் பென்டிரைவ்களையும் வாங்கி தருகிறார்.
இதுகுறித்து ஆசிரியை யுவராணி கூறுகையில், மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத காரணத்தினால் தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களை வீட்டில் இருந்து படித்துக்கொள்ளலாம். ஆனால் கணிதம் பாடம் மாணவர்களுக்கு கடினம் என்பதால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் கணித பாடத்தை நடத்தி வருகிறேன்.
மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று பாடம் எடுப்பது மனநிறைவை கொடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து படித்து தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என்பது சந்தேகம் தான் சுட்டுப் போட்டாலும் தங்களுக்கு கணிதம் வரவே வராது.
ஆனால், எங்கள் கணித ஆசிரியை வீட்டிற்கு வந்து நேரடியாக பாடம் நடத்துவது மிகவும் எளிதாகவும் புரியும் வகையிலும் இருப்பதால், எப்போது தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று பாடம் எடுப்பது மனநிறைவைக் கொடுப்பதாகவும் ஆசிரியை தெரிவித்தார்.
Also Read
-
இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் நிர்வாகி கைது !
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !