Tamilnadu
“எங்களுக்கு சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது” : மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியை சேர்ந்தவர் கணித பட்டதாரி ஆசிரியை யுவராணி. இவர் திருப்பெருமந்தூர் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கொரோனா தொற்றுகாலத்தில் மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளை திறக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் தினமும் பள்ளிக்கு ஆசிரியர்கள் மட்டுமே சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், காலையிலும், மாலையிலும் மாணவர்களின் வீட்டிற்க்கே சென்று பாடம் நடத்தி வருகின்றார். கணித ஆசிரியை யுவராணி காலை 7-30 மணி முதல் 8-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், திருப்பெருமந்தூர் அடுத்த மாத்தூர், வல்லம், வல்லக்கோட்டை ஆகிய பல கிராமங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தில் மாணவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இலவசமாக பாடம் நடத்தி வருகின்றார்.
மாணவர்களின் வீட்டிற்கு செல்லும்போது அவர்களுக்கு திண்பண்டங்களையும் வாங்கி செல்வதையும் வழக்கமாக செய்து வருகின்றார். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவ மாணவிகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க டேப் மற்றும் பென்டிரைவ்களையும் வாங்கி தருகிறார்.
இதுகுறித்து ஆசிரியை யுவராணி கூறுகையில், மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத காரணத்தினால் தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களை வீட்டில் இருந்து படித்துக்கொள்ளலாம். ஆனால் கணிதம் பாடம் மாணவர்களுக்கு கடினம் என்பதால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் கணித பாடத்தை நடத்தி வருகிறேன்.
மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று பாடம் எடுப்பது மனநிறைவை கொடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து படித்து தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என்பது சந்தேகம் தான் சுட்டுப் போட்டாலும் தங்களுக்கு கணிதம் வரவே வராது.
ஆனால், எங்கள் கணித ஆசிரியை வீட்டிற்கு வந்து நேரடியாக பாடம் நடத்துவது மிகவும் எளிதாகவும் புரியும் வகையிலும் இருப்பதால், எப்போது தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று பாடம் எடுப்பது மனநிறைவைக் கொடுப்பதாகவும் ஆசிரியை தெரிவித்தார்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!