Tamilnadu

ஃபேஸ்புக்கில் வந்த தகவல்.. நேரில் ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்துத் துறைகளையும் சீர்திருத்தும் முயற்சிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையின் அமைச்சர்களும் அனைத்துத் தரப்பினரின் குரல்களுக்கும் செவிசாய்த்து உடனடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் கலை பண்பாட்டு ஆய்வாளரான விஜயகுமார், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள படிமக் கூடத்தில் (Bronze Gallery) மேற்கூரையில் இருந்து நீர் ஒழுகுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, உடனே பழுது பார்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதுகுறித்து அறிந்த தொழிற்துறை, ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்று துறையின் முதன்மைச் செயலாளர், அருங்காட்சியக இயக்குநர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோருடன் அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

புனரமைப்புப் பணிகளை விரைவாகச் செய்வதற்கும், செப்புத் திருமேனிகளுக்கு எவ்வித பாதிப்பும் வந்து விடாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்வதற்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

ஃபேஸ்புக் பதிவில் சுட்டிக்காட்டிய பிரச்னையை தீவிரமாக கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: சிக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!