Tamilnadu

நவீனமயமாகிறது தமிழ்நாடு அரசு பள்ளிகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன அசத்தல் தகவல்!

தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் அரசின் நிதி நிலைக்கு ஏற்ப ஒன்றிய - மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீன மயமாக்கப்படும் என கொடும்பப்பட்டியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்த கொடும்ப்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

பள்ளிக்கல்வி துறையின் மாணவ - மாணவிகளின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து வரும் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார். தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் நிதி நிலைக்கு ஏற்ப ஒன்றிய - மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீன மயமாக்கப்படும்.

மேலும் தமிழகத்தில் செப்டம்பர் 1 ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவிகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாணவ - மாணவிகள் நலன் காத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தினமும் 50 சதவிகித மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வருகை தரும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.