Tamilnadu

"பெட்ரோல் விலை ஏறுது.. தாக்குப்பிடிக்க முடியல”: மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்- அதிர்ச்சி சம்பவம்!

வாங்கும் பெட்ரோல் போடவே போதவில்லை என்றும் பெட்ரோல் போட வீட்டிலும் பணம் தரவில்லை என்றும் மனமுடைந்து நகராட்சி தற்காலிக ஊழியர் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (28). இவர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுனராகப் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ரோகிணி பிரபா. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவி ரோகிணி பிரபாவிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு ரோகினி பிரபா தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் தன்னுடைய சம்பள பணத்தில் பாதி பெட்ரோலுக்கு போய்விடுவதாகவும், இதில் வீட்டிலும் பணம் கொடுக்க மறுத்த காரணத்தினால் கிருஷ்ணசாமி மனமுடைந்து போயுள்ளார்.

சம்பளம் உயரவில்லை ஆனால் பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி பல மடங்கு உயர்ந்து வருவதாக புலம்பியவாறு இருந்துள்ளார் கிருஷ்ணசாமி. அப்போது ரோகினி பிரபா பாத்ரூமுக்குள் சென்று விட தனியாக இருந்த கிருஷ்ணசாமி திடீரென மனைவியின் சேலையை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ரோகிணி பிரபா, கணவர் கிருஷ்ணசாமி சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். சம்பவம் அறிந்து வந்த அருகில் இருந்தவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையெடுத்து போலிஸார் விரைந்து வந்து கிருஷ்ணசாமி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் போடுவதற்கு பணம் தர மறுத்த காரணத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஆக.23 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. இறைச்சிக் கடைகள் இருக்குமா? - கடைகளுக்கான விதிமுறைகள் என்ன? முழு விபரம்...