தமிழ்நாடு

ஆக.23 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. இறைச்சிக் கடைகள் இருக்குமா? - கடைகளுக்கான விதிமுறைகள் என்ன? முழு விபரம்...

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் கடைகளுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் என்னென்ன?

ஆக.23 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. இறைச்சிக் கடைகள் இருக்குமா? - கடைகளுக்கான விதிமுறைகள் என்ன? முழு விபரம்...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 23 வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன:

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 23 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுளளது. ஆகஸ்ட் 16 முதல் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனிக் கடைகளாகப் பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துத் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலைப் பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துக் கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக / இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.

அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories