Tamilnadu

தன் காதலுக்கு போட்டியாக இருந்த நண்பனை வெட்டிக் கொன்ற சிறுவன் : திட்டம் போட்டுக் கொலை செய்தது அம்பலம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியைச் சேர்ந்த பொய்யாழியின் 22 வயதாகும் மகன் மதன்குமார். இவர் கோவில்பட்டி மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரை அருகே கடந்த 29ம் தேதி அன்று மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனையடுத்து போலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலிஸார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவர் மதன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இளஞ்சிறாரும், கொலை செய்யப்பட்ட மதன்குமார் என்பவரும் நெருங்கிய நண்பர் ஆவார்கள். அவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் குற்றவாளியான இளஞ்சிறார், தன்னுடைய காதலுக்கு மதன்குமார் இடையூறாக இருப்பதாக கருதி மதன்குமாரை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று திட்டமிட்டு சம்பவ இடமான காட்டுப்பகுதியில் அரிவாளை மறைத்து வைத்துவிட்டு, மதன்குமாரை மது அருந்துவதற்கு சம்பவ இடத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார்.

மதன்குமார் ஒரு பைக்கிலும், இளஞ்சிறார் ஒரு பைக்கிலும் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு இருவரும் சந்தித்து மதன்குமாரை மது அருந்த வைத்துள்ளார். அப்போது இளஞ்சிறார் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மது அருந்திக் கொண்டு இருந்த மதன்குமாரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். பின் அந்த அரிவாளை அருகிலுள்ள குளத்தில் போட்டுள்ளதும் போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின் தனிப்படை போலிஸார் இளஞ்சிறாரை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குளத்திலிருந்து அரிவாளை கைப்பற்றியும், அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'தலைமுடியைக் கிண்டல் செய்ததால் ஆத்திரம்'... பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு- ஒருவர் கொலை: 5 பேர் கைது!