Tamilnadu

"போக்குவரத்து துறையை சீரழித்த அதிமுக... ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டம் - 5 லட்சம் கடன்" : அமைச்சர் ராஜகண்ணப்பன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகரிக்குடி சாலை விலக்கு அருகே புதிதாக ஏழு வழித்தடங்களில் பேருந்து சேவை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று புதிய வழித்தட த்துக்கான பேருந்து சேவையை துவக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழ்நாட்டிற்குத் திறமையான முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கிடைத்துள்ளார். எதிர்க்கட்சிகளே இல்லாத அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் ரூபாய் 33 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5.76 லட்சத்திற்குக் கடன் வைத்துள்ளனர். இந்த கடனுக்கு தற்போது வட்டி கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின்போது தினந்தோறும் 13 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் போக்குவரத்துத் துறை சீர்செய்யப்பட்டு கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு விரைவில் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்திற்கு ரூ.1,358 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மக்களாட்சியின் மாண்பினை உயர்த்துகிறார் மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!