Tamilnadu

நகைக்காக நண்பரின் மனைவி கழுத்தை நெரித்து கொலை; கில்லி விஜய் பாணியில் தப்பித்தவர் சிக்கியது எப்படி?

சென்னை காசிமேடு காசிமாநகர் 1வது தெருவில் வசித்து வருபவர் மீனவர் மைக்கேல் நாயகம் (62). இவரது மனைவி அந்தோணி மேரி வயது 60. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

மைக்கேல் நாயகம் நேற்று அதிகாலை மீன்பிடிக்க விசைப்படகில் கடலுக்கு சென்று உள்ளார். வீட்டில் அந்தோணி மேரி தனியாக இருந்தபோது அவரது மகள் சுபா நேற்று இரவு செல்போனில் பேசுவதற்கு முயன்றுள்ளார். அவர் போனை எடுக்காததால் வீட்டிற்கே சென்று பார்த்தபோது அந்தோணி மேரி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்த கதறி அழுதுள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி ஆணையர் உக்கிரபாண்டியன் தலைமையிலான போலீசார் மோப்ப நாய்களை வரவழைத்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கொலையாளி சினிமா பட பாணியில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க மூதாட்டி மீது மஞ்சள் மற்றும் மிளகாய் தூளை தூவிவிட்டு சென்றதால் மோப்ப நாய்களும் கொள்ளையனை பிடிக்க சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடலுக்கு சென்ற கணவர் வீடு திரும்பியபோது போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் வழக்கமாக நாங்கள் ஐந்து பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்வோம். இன்று எனது நண்பர் சகாயம் என்கிற அலெக்ஸ் மட்டும் எங்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க வரவில்லை. அவர்தான் எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார் என தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் காசிபுரம் பகுதியில் உள்ள அவர் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த சகாயத்தை காவல் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் விசாரணையில் சகாயம் நகையை திருடியதையும் கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நேற்று காலை எட்டரை மணியளவில் அவரது வீட்டுக்கு சென்றதாகவும், எனது நண்பரின் மனைவியை எப்போதும் ஆன்ட்டி என்றுதான் அழைப்பேன் என்றும் அவரது கழுத்தில் நகைகள் இருப்பது கண்ணை உறுத்திக் கொண்டே இருந்ததால் வீட்டின் வறுமையினால் மனைவி அடிக்கடி என்னிடம் சண்டையிட்டு வருவதால் நகைக்காக அவரின் கழுத்தில் துண்டை வைத்து இருக்கி கொன்றதாகவும் கழுத்தில் காதில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை எடுத்துக்கொண்டு போலீசிடம் இருந்து தப்பிக்க மிளகாய்ப் பொடி தூவி விட்டு சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து சகாயம் மீது வழக்குப் பதிவு செய்து காசிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக நண்பனின் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.