Tamilnadu
“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
'தகைசால் தமிழர்' விருதிற்கு முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மக்கள் தொடர்புசெய்தித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.
இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான "தகைசால் தமிழர்" விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
"தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யா அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!