Tamilnadu

RTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனக்கும் இந்தி தெரியாது என தெரிவித்த நீதிபதி ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒன்றிய மோடி அரசு இந்தியில் பதில் அளித்து வருவது சர்ச்சயை ஏற்படுத்தி வருகிறது.

இந்தி பேசாத மாநில மக்களின் கேள்விகளுக்கு இந்தியில் பதிலளிக்கப்படுவது இந்தியை திணிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையிலும், தொடர்ந்து இதையே செய்து வருகிறது ஒன்றிய அரசு.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாகவும், ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம், தான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன், இந்தியில் பதிலளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தனக்கு இந்தி மொழி தெரியாது என்றும் தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும் என்றும் எனவே இந்தியில் வழங்கிய பதிலை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு தெரிந்த மொழியில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் கோரியிருருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி வைத்தியநாதன் தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார். மேலும், இதுகுறித்து ஒன்றிய அரசு வருகிற 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Also Read: “வேண்டும்.. வேண்டும்..! நீதி வேண்டும்..!” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்!