Tamilnadu

உதவி கேட்ட பெண்ணின் ATM கார்டை திருடிய வடமாநில வாலிபர்; ரூ.99,000க்கு நகை வாங்கி ரூ.1 லட்சம் அபேஸ்!

சென்னை மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. 45 வயதான இவர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 14ம் தேதி காலை 9.45 மணியளவில் ராஜாஜி சாலையில் உள்ள SBI ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்றிருக்கிறார்.

அப்போது ஏடிஎம்-ல் இருந்து பணம் வராததால் அருகில் இருந்த நபரிடம் உதவியை நாடியிருக்கிறார். அந்த நபரோ சுகந்திக்கு உதவுவது போல நடித்து அவரது ஏடிஎம் கார்டை வாங்கி இருப்புத் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்திருக்கிறார்.

லட்சக்கணக்கில் பணம் இருப்பதை தெரிந்துக் கொண்டு தன்னிடம் இருந்த ஏடிஎம் கார்டை பெண்ணிடம் கொடுத்து மெஷினில் பணம் வரவில்லை எனக் கூறியிருக்கிறார். அந்த பெண்ணோ அலுவலகத்துக்கு செல்லும் அவசரத்தில் கவனிக்காமல் சென்றிருக்கிறார்.

இப்படி இருக்கையில் ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்த நபர் ஜூலை 14ம் தேதியன்று இரண்டு மையங்களில் ஒரு லட்சம் ரூபாயை எடுத்ததோடு மறுநாள் புரசைவாக்கத்தில் உள்ள தங்க நகைக் கடையில் 99 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கியிருக்கிறார்.

இது தொடர்பான SMS சுகந்திக்கு சென்றடைய அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் வடக்கு கடற்கரை போலிஸாரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வடக்கு கடற்கரை காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான குழு மேற்கொண்ட தீவிர விசாரணையில் பீகாரைச் சேர்ந்த சந்தன் சகானி என்ற நபர்தான் சுகந்தியின் ஏடிஎம் கார்டில் இருந்து ஷாப்பிங் செய்து பணத்தையும் திருடியிருக்கிறார் என்பது தெரியவந்தது.

உடனடியாக கைது செய்யப்பட்ட சந்தன் சகானியிடம் இருந்து ஒரு செல்போனும் 24 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதோடு விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

Also Read: மக்களே உஷார்.. ‘ஹலோ, பேங்க் மேனேஜர் பேசுறேன்’ : வங்கிக்கு வரவழைத்து நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்!