Tamilnadu

“நீட் வேண்டாம் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

திருச்சி திருவெரும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து சால்வை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “பாண்டிச்சேரியில் 9-12ம் வகுப்பு வரை பள்ளிகள் 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் முதலமைச்சரிடம் கொண்டு சேர்த்து தற்போதுள்ள கொரானா சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முதலமைச்சர் என்ன வழிவகை கூறுகிறாரோ அதன்படி பள்ளிகள் திறக்கப்படும்.

ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்த கருத்து கணிப்பின்படி 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியை நோக்கி வந்துள்ளனர். நடப்பாண்டு அரசு பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

வருகின்ற மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள போதுமான கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் மற்றும் இருக்கும் ஆசிரியர்களுக்கான தக்கவைக்க பயிற்சிகள் நடந்து கொண்டு இருக்கும். அதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது. துறை ரீதியான ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டது, வருகின்ற மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

நீட் பயிற்சி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது, அரசின் நிலைப்பாடு என்பது நீட் வேண்டாம் என்பதுதான். தமிழகத்திற்கு விலக்கு என்பதில் திட்டவட்டமாக உள்ளோம், ஆன்லைன் மூலமாக கடந்த ஆண்டு முதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது வருகிறது. முதலமைச்சர் கூறியதுபடி தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு பெறுவது தான் எங்கள் இலக்கு.

9 மற்றும் 10 அதற்கு மேற்பட்டவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 17 சதவீத இடைநிற்றலை 5 சதவீத குறைப்பது தான் எங்களது இலக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்கள். கருத்துகணிப்புகள் எடுக்கப்படவுள்ளதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பலர் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அதிகாரியிடம் கலந்தாலோசித்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதன்படி செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்த அ.தி.மு.க நிர்வாகி” : தானமாக வழங்கியவரின் மகன் புகார் !