Tamilnadu
மேகதாது அணை பிரச்சினை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்றக் கட்சிகள் கூட்டம் !
மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க - இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தலைமையில், அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன் விபரம் வருமாறு :- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசுமேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து, மேகதாது அணை பிரச்சினை குறித்து விவரிக்கையில், “தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும், அண்மையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து, “இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கோரினார்.
மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது எனக்கோரி கர்நாடக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, ‘இந்த அணை கட்டுவதால், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும்’ என்றும், ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும்’ என்றும் திட்டவட்டமாக விளக்கி, ‘இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ என உறுதிபடத்தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கர்நாடக முதலமைச்சர் அவர்களுக்குப் பதில் கடிதம் எழுதினார்.
இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணைப் பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (12.7.2021 - திங்கள்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை - தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!