Tamilnadu

"சங்கறுத்துடுவேன்” : அபராதம் விதித்த போலிஸாருக்கு கொலை மிரட்டல்... இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு!

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தினர். அப்போது வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் போலிஸார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து அபராதம் செலுத்திய நபர், அவரது நண்பரும், இந்து முன்னணி நிர்வாகியுமான செல்லப்பாண்டியனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செல்லப்பாண்டியன், போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் "வசூலித்த கட்டணத்தைத் திருப்பி கொடுக்காவிட்டால், சங்கை அறுத்துவிடுவேன், குத்தி கொலைசெய்து விடுவேன், டூட்டி போட்டாங்கனா அப்படியே ஓரமா உட்கார்ந்துவிட்டு போகவேண்டியது தானே, உங்களுக்கு இருக்கும் பவரு எனக்கும் இருக்கு, நான் இந்து முன்னணி ஒன்றிய தலைவர்" என போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்லியம் ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில், செல்லப்பாண்டியன் மற்றும் தமிழரசன் ஆகியோர் மீது ஆபாசமாகத் திட்டியது, பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் மற்றும் மத ரீதியாக விமர்சனம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் போலிஸாருக்கு, செல்ல பாண்டியன் கொலை மிரட்டல் விடுவதை, அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: மின் மாஃபியா... மின் வாரியத்தைச் சீர்குலைத்த கும்பல் - அதிரடி நடவடிக்கை பாயுமா? - ஆவலில் மக்கள்!