Tamilnadu

10 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர்: அதிரடியாக மீட்டது அறநிலையத்துறை!

சிவகங்கையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமித்த ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சிவகங்கையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கௌரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகன் பாலா மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் போலி பத்திரத்தைத் தயாரித்து கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் புகார் வந்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்து, சிவகங்கை - வேலூர் சாலையில் உள்ள 10 ஏக்கர் நிலத்தை போலிஸார் உதவியுடன், அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும் கோயில் நிலத்தில் கட்டப்பட்டு வந்த கட்டமான பணிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: 62 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் எழுதிய குறிப்பு... ஆய்வில் கிடைத்த புதையல்... மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி!