Tamilnadu

“கி.ராஜநாராயணனுக்கு சிறப்பான அரசு மரியாதை” - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கி.ராவின் மகன்கள்!

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், தமிழின் மகத்தான கதைசொல்லி என வாசகர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது 99 வயதில் திங்களன்று இரவில் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இதையடுத்து, எழுத்தாளர் கி.ரா மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, அரசு மரியாதையுடன் கி.ராஜநாராயணன் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.

பின்னர், நேற்று அவரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கி.ரா அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும், அவரது நினைவைப் போற்றும் வகையில் ஓர் அரங்கம் அமைக்கப்பட்டும் என்றும், கி.ரா படித்த பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கி.ராஜநாராயணனின் மகன்கள் திவாகர், பிரபாகர் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலமான எங்களது தந்தையார், மூத்த தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கிய பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு, மிகச் சிறப்பான வகையில் அரசு மரியாதை அளிக்க ஏற்பாடு செய்துதந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.

இடைசெவல் கிராமத்திற்கு நேரில் வருகை தந்து மரியாதை செலுத்திய மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் சபாநாயகர், அமைச்சர் பெருமக்கள், எழுத்தாளர்கள், கி.ரா அன்பர்கள், வாசகர்கள், காவல்துறையினர், பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது குடும்பத்தினர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கி.ரா அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!