Tamilnadu

“ஒரு பயணி என்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும்” - நெறிமுறைகளை வெளியிட்ட போக்குவரத்துத்துறை!

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகர பேருந்துகளில் மே 8ஆம் தேதி முதல் கட்டணமில்லாமல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்றே உத்தரவிட்டார்.

அதன்படி, அடுத்தநாளே இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதால் பேருந்துகளில் பெண்கள் அசௌகரியங்களைச் சந்திக்கக்கூடும் எனச் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நகர மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்வது தொடர்பாக பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளாவன:

* ஒரு பயணி என்றாலும் அவருக்காக பேருந்தை நிறுத்தி அந்த பயணியை ஏற்றிச்செல்ல வேண்டும்.

* பெண் பயணிகளிடன் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

* வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும்.

* பெண்களிடம் எரிச்சலூட்டும் வகையிலோ, கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.

* பெண்கள் பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து பாதுகாப்பாக ஏறி, இறங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும்.

* பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பல்வேறு வகையிலான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: அன்பில் எழுப்பிய ஆவேசக் குரல்.. கொள்கை ரீதியாக நிர்வாக திருத்தம் செய்யும் தி.மு.க அரசு” : முரசொலி !