Tamilnadu
ஓராண்டுக்கும் மேலாக முன்களப்பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் பலி... முதல்வர் இரங்கல்!
மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா தொற்றால் மறைந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை அனுப்பானடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த 8 மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியாவிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சில நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனோ பாதிப்பை தொடர்ந்து 90% க்கும் மேல் நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கர்ப்பிணி என்பதால் அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுவந்த 8 மாத கர்ப்பிணி அரசு மருத்துவர் கொரோனோ தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் சக மருத்துவ ஊழியர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
முன்களப் பணியாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் சண்முகப்பிரியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்களப்பணி வீரராக - அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணி ஆற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.
மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன்.
மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே
-
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!