Tamilnadu

துரத்தும் கொரோனா: தமிழகத்தில் அமலானது புதிய கட்டுப்பாடுகள்; எவையெல்லாம் இயங்கும்?

கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மளிகை காய்கறி கடைகள், பால் ஆகியவை நண்பகல் 12 வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

பேருந்து சேவைகளுக்கு 50 சதவிகித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளும் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் அலுவலக பணிக்கு செல்பவர்கள் ஆகியோருக்கு அனுமதி இல்லை. தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஊடகத்துறையினர், வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கடைகள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல பேருந்துகளின் எண்ணிக்கை அதே நிலையில் தொடரும் என்றும், ஆனால் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பேருந்தில் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் முறையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அணிந்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இருப்பினும் திருவேற்காடு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் செல்லும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எச்சரிக்கப்பட்டு வேறு பேருந்துக்கு மாற்றி அனுப்பப்படுகின்றனர்.