Tamilnadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 122 பேர் உயிரிழப்பு!

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,35,016 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 20,952 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போதைய நிலையில் 1,23,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,28,064 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 18,016 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,90,338 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 46 பேர் தனியார் மருத்துவமனையிலும், 76 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,468 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,52,260 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,618 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 1,566 பேருக்கும், திருவள்ளூரில் 1,207 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: பதவியேற்பதற்கு முன்பே கொரோனாவை ஒழிக்க களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்... உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!