Tamilnadu

மீண்டும் உயர்ந்துவரும் பலி எண்ணிக்கை... தமிழகத்தில் இன்று 12 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலால் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இன்று 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது தினசரி பாதிப்பு.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,37,711 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,13,144 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,12,79,542 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 3,789 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,97,814 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 906 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 689 பேருக்கும், திருவள்ளூரில் 510 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 39 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 7,526 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,34,966 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 89,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 59 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 39 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,317 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: இந்தியாவில் பரவிவரும் ‘மும்முறை உருமாறிய கொரோனா’... தடுப்பூசி பலனளிக்குமா? - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!