Tamilnadu

நிதி நிறுவனம் நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: மனைவியுடன் சேர்ந்து கூட்டு சதி - வட சென்னை பா.ஜ.க நிர்வாகி கைது!

சென்னை செம்பியம் பகுதியில் சுவர்ணலட்சுமி என்ற பெயரில் தனது குடும்பத்துடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வருபவர் வி.எஸ். சீனிவாசன். இவர் பெரம்பூர் பாஜக வர்த்தக அணி பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது வட சென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார்.

பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலர் சீனிவாசன் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்தனர். இது மட்டுமில்லாமல் சீனிவாசன் பலருக்கு கந்து வட்டி முறையில் பணம் அளித்து வந்ததாகவும், குறிப்பிட்ட தேதியில் வட்டி கொடுக்க தவறினால் சீனிவாசன் அடியாட்களை அனுப்பி மிரட்டி பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Also Read: ஒரு இடத்தில் கூட வெல்லாமல் மறைமுகமாக தமிழகத்தை ஆளும் பாஜக.. மோடி அரசு கவிழ்த்த மாநில அரசுகளின் பட்டியல்!

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பொது மக்கள் கட்டிய சீட்டு பணத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் இருந்ததால் சீனிவாசன் நடத்தி வரக்கூடிய நிதி நிறுவனத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தனர். திடீரென்று சீனிவாசன் தனது நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதனால் 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வரக்கூடிய சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெரம்பூரைச் சேர்ந்த தனசேகரன், மயிலாப்பூரைச் சேர்ந்த பரணி ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாகி இருந்த பா.ஜ.க பிரமுகர் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கனக துர்கா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: “இந்துக்கள் நலன் என கூப்பாடு போடும் பாஜக கிராமப்புற கோயில்களை அழிக்கிறது” - பூசாரிகள் நலச்சங்கம் புகார்!