Tamilnadu

“ஐகோர்ட் அளித்த தீர்ப்பு சரிதான்” - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

தமிழக அரசு முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினரை பொதுப்பட்டியலில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையில் 356 முதுநிலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 2019 ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டு பணி நியமனம் செய்தது.

அந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டு பிரிவினரைப் பொதுப் பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்த மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் நியமிக்கும் வகையில் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட ஷோபனா, சித்ரா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு பட்டியலை மறுபரிசீலனை செய்து, புதிய தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்கவேண்டும் என்றும் அதில் பின்னடைவு காலி பணியிடங்களை முதலில் நிரப்ப வேண்டும் என்றும், அதன்பின் தற்போதைய காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொது பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்த மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்த்தது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரிதான் என்று தீர்ப்பு வழங்கினர். தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Also Read: நக்கலடித்த சுதிஷ்... கழட்டி விடப்பட்டாரா விஜயகாந்த்? - பா.ம.க தேர்தல் அறிக்கையில் சூசக அறிவிப்பு!