Tamilnadu

விபத்தில் சிக்கிய மருத்துவர் மனைவியை கொலை செய்தது அம்பலம் : போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

கோவையைச் சேர்ந்தவர் கோகுல் குமார், இவர் சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர் மதுராந்தகத்தை அடுத்த ஆனந்தா நகரைச் சேர்ந்த கீர்த்தனா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கீர்த்தனா மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வேதனையடைந்த கீர்த்தனா விவாகரத்து கேட்டுள்ளார். பின்னர் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாமல் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று மாலை அங்கு வந்த கோகுல்குமார் திடீரென கீர்த்தனாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, அவரை கீழே தள்ளி காரை ஏற்றியுள்ளார். பின்னர் மாமனார் முரஹரி, மாமியார் குமாரி ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்ற, கோகுல் குமார் அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் படுகாயம் அடைந்த கோகுல் குமாரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து போலிஸார் கோகுல் குமாரிடம் நடத்திய விசாரணையில், மனைவியை காரை ஏற்றிக் கொன்று விட்டு தப்பிச்செல்லும் போது விபத்து ஏற்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார். பிறகு, கோகுல் குமார் சொன்ன தகவலின் அடிப்படையில் கீர்த்தனாவின் வீட்டிற்குச் சென்று, அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் படுகாயமடைந்த முரஹரி மற்றும் அவரது மனைவி குமாரி ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மதுராந்தகம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பெண் குழந்தையாகப் பிறப்பது குற்றமா? : உசிலம்பட்டியில் இன்றும் தொடரும் கொடூரம்!