Tamilnadu

விவசாயியின் வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி: ஒரு வாரமாக வீட்டிற்கு வெளியே காத்து கிடக்கும் அவலம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிசங்குளத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 2018ம் ஆண்டு தனியார் வங்கி ஒன்றில் விவசாயக் கடனாக சுமார் 4.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். மேலும் கடன் பெற்ற அந்ததொகையைக் கொண்டு 7 கறவை மாடுகள் வாங்கியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாததாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிலை சரிவர செய்யமுடிமால் போனது. இதனால் வங்கியில் வாங்கிய கடனையும் அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. மேலும் வங்கிக்கடனை செலுத்துவதற்கு கால அவகாசமும் கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு உடன்படாத வங்கி நிர்வாகம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வழக்கறிஞர்கள் உதவியுடன் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளது. கடனை விரைவில் அடைத்துவிடுவதாகவும் கூறியும் அதிகாரிகள் பிடிக்கொடுக்காமல் சென்றுள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரமாக சதீஷ்குமார் அவரின் மனைவி மற்றும் மகள்களான சவுந்தர்யா மற்றும் வித்யா ஆகியோர் மாற்று உடையின்றி தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை; எங்கள் பிள்ளைகள் இதனால் மிகுந்த மனவேதனையில் உள்ளார்கள். படிக்கும் புத்தகம் கூட வீட்டிற்கு கிடக்கிறது என சதீஷ்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து தனியார் வங்கியின் இச்செயலை சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.மேலும், உடனே தமிழக அரசு தலையிட்டு, தனியார் வங்கி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Also Read: மோடி - எடப்பாடி ஆட்சியில் கைவிடப்பட்ட விவசாயிகள் : கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த விவசாயி !