Tamilnadu

மாமூல் வாங்கியவர்களை தட்டிக் கேட்ட வணிகர் சங்கத் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - சென்னையில் அவலம்!

சென்னை குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனியில் வசித்து வருபவர் குமார். இவர் அதே பகுதியில் வேதா மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.மேலும் இவர் வணிகர் சங்கத்தின் செயலராகவும் உள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த யுவராஜ், அங்கிருக்கும் கடைகளில் மாமூல் வேட்டையில் ஈடுபட்டுவந்துள்ளார். இது குறித்துக் கடை உரிமையாளர்கள் குமாரிடம் கூறியுள்ளனர். பின்னர் குமார் இது பற்றி யுவராஜிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குமார் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், யுவாராஜின் மகன் சதீஷ், உறவினர் லோகநாதன் ஆகியோர் தங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு, நேற்று முன் தினம் இரவு குமாரின் உணவகத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் குமாரை சரமாரியாக வெட்டி விட்டு, இந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. பின்னர் அருகிலிருந்தோர் இரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து, குரோம்பேட்டை போலிஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சதீஷ், லோகநாதன் மற்றும் நண்பர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சதீஷ் மற்றும் சந்துருவை போலிஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகநாதனை போலிசார் தேடி வருகின்றனர்.

Also Read: “பிறந்தநாளுக்கு வர மறுத்த நண்பனை காரை ஏற்றி கொன்ற உயிர் நண்பன்” : ஆந்திராவில் நடந்த கொடூர சம்பவம்!