Tamilnadu

பேனரை ட்ரோனில் இருந்து வீசிய சசிகலா தொண்டர்கள் : உயிரிழப்புகளுக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா ?

தமிழகத்தில் தேர்தல் நேரங்கும் நேரத்தில், அரசியல் களம் பரபரக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலையானார். இவர் விடுதலையானதை அடுத்து அ.தி.மு.கவில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

குறிப்பாக, சசிகலா விடுதலையான தினத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருவார் என்பதை அறிந்த எடப்பாடி அரசு, 'பராமரிப் பணி நடைபெற உள்ளது' என வெற்றுக் காரணத்தைச் சொல்லி நினைவிடத்தை மூடியது.

பிப்ரவரி 8ம் தேதி சகிகலா சென்னை வருகிறார் என டி.டி.வி தினகரன் அறிவித்ததையடுத்து, சென்னையில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கியிருக்கும் வீதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் பீதியடைந்த அமைச்சர்கள் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கிறார்கள் என டி.ஜி.பி.யிடம் சென்று கூப்பாடு போட்டனர்.

சசிகலா சென்னை வருவதை அடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக தமிழக எல்லையில் விதிமுறைகளை மீறி பல இடங்களில் பேனர்களும், கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டன.

இந்த பேனர் கலாசாரத்தின் உச்சமாக ட்ரோன் மூலம் 100 அடி உயரத்தில் உருளையான பேனர் ஒன்றை பறக்கவிட்டனர். இது தவறுதலாக கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்தியிருந்தால் இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? இப்படி ட்ரோன் மூலம் பேனரைப் பறக்க வைத்ததற்கு யார் அனுமதி அளித்தது?

ஏற்கனவே அ.தி.மு.க.,வின் பேனர் கலாசாரத்தால் பல உயிர்களையும் அவர்களின் குடும்பங்களின் கனவுகளைச் அ.தி.மு.க சிதைத்திருக்கிறது. சென்னையில் எடப்பாடிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார்.

அதேபோல், கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான அலங்கார வளைவு விழுந்து ரகுபதி என்ற இளைஞர் பலியானர். இப்படி பேனர் கலாச்சாரம் பல பேரின் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது.

அ.தி.மு.கவின் வழி வந்தவர்தானே சசிகலா. அதனால் தான் என்னவோ அவரை வரவேற்பதற்காகப் பொதுமக்களை பற்றி கவலைப்படாமல் 100 அடி உயரத்தில் பேனரைப் பறக்க விட்டுள்ளனர்.

போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என அறிக்கை விடும் காவல்துறை, ட்ரோன் மூலம் பேனர் பரக்க விடுவதற்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தது? வருமுன் காப்பதுதான் சிறந்தது என்பதை எப்போது தான் காவல்துறை உணருமோ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: "மத்திய அரசு இணைச் செயலாளர்கள் நேரடி பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி" - வைகோ கடும் கண்டனம்!