Tamilnadu

பேரறிஞர் நினைவுநாள் அமைதி பேரணிக்கு அனுமதி மறுத்த அதிமுக அரசின் காவல்துறை: திமுக மாவட்ட செயலாளர் கண்டனம்!

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக்.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“அறிவுலக ஆசான், பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட தி.மு.கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலய முகப்பிலும், குன்னூர் பேருந்து நிலையம் அருகேயும், கொணவக்கரை பெங்காம் ஆகிய பகுதிகளிலுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைகளுக்கும் மற்ற இடங்களில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படங்களுக்கும் மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

குன்னூர் லாலி மருத்துவமனை சந்திப்பு முதல் குன்னூர் பேருந்து நிலையம் வரை மவுன ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்துவது பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பிறகு கடைபிடிக்கப்பட்டு வரும் நிகழ்வாகும்.

ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறை பிப்ரவரி 2ம் தேதி இரவு 9.30 மணிக்கு மவுன ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி கடிதம் வழங்கியுள்ளனர்.

திராவிட முன்னேற்ற கழக நிறுவனர், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளுக்கே அனுமதி மறுத்துள்ள இந்த எடப்பாடி அரசின் காவல் துறையின் செயலை ஒவ்வொரு திராவிட இயக்க தொண்டனும், கட்சி சார்பின்றி கண்டிக்க வேண்டியதாகும்.

எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, 3.2.2021 காலை 11.30 மணியளவில், குன்னூர் லாலி மருத்துவமனை சந்திப்பு முதல் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை வரை ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்திட கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களை அன்புடன் வேண்டுவதோடு, ஊர்வலத்தை தடுக்கும் நோக்கில் காவல்துறை செயல்படுமேயானால், அதே இடத்தில் மறியல் அறப்போர் நடைபெறும் என்பதனையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “10 ஆண்டுகளில் விளம்பரத்துக்காகவே ரூ.100 கோடி செலவு” - மக்கள் பணத்தை வாரி இறைத்த அதிமுக அரசு!