Tamilnadu

பேருந்தில் மின்சாரக் கம்பி உரசி 5 பேர் பலி: “அ.திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் விபத்து” - நடந்தது என்ன?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின் கம்பிகள் அறுந்து விழுந்தும், மின்கம்பங்களில் மின்சாரம் பாய்ந்தும் பலர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் எடப்பாடி அரசின் மின்சாரத்துறையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு காரணமாக இத்தகைய மின் விபத்துகளில் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வரகூர் அருகே தனியார் பேருந்து மீது உயர் அழுத்த மின்சாரக் கம்பி உரசியதால் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தஞ்சை நோக்கி தனியார் பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்த போது வரகூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு சில மீட்டர் தூரம் சென்ற போது, திருக்காட்டுப்பள்ளியை நோக்கி எதிரே வந்த லாரிக்கு சாலையில் இடம் கொடுத்து பேருந்து சாலையில் இடதுபுறம் ஒதுங்கியுள்ளது.

அப்போது, சாலை விரிவு படுத்துவதற்காக சாலை பணிகள் நடைபெறுவதால் சேறும் சகதியுமாய் இருந்ததால் சகதியில் பேருந்து உள்வாங்கிய நிலையில் சாலை ஓரமாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி பேருந்து மீது உரசியதில் மின்சாரம் தாக்கி பேருந்தில் பயணம் செய்த கவிதா, நடராஜன், கல்யாணராமன் மற்றும் கணேசன் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நடுக்காவேரி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேருந்தில் பயணித்த ஒருவர் கூறுகையில், “பொங்கல் விழாவிற்காக மளிகை பொருட்கள் வாங்க இந்தப் பேருந்தில் பயனித்தேன். முறையான சாலை வசதி இல்லாததும் மற்றும் உயர் அழுத்த மின் கம்பிகள் பராமரிப்பின்றி தாழ்வாக சென்றதே விபத்துக்கு காரணம்.

பேருந்தில் முன்பக்கம் இருந்த பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அலறல் சத்ததிற்குப் பிறகுதான் 5 பேர் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்தது தெரிந்தது.” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மின்சார வாரிய உயரதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும். மின்சார துறையின் அலட்சியமே இவ்விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார். பேருந்தில் மின்சாரம் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Also Read: மைக்கை தூக்கிவீசிய விஜயபாஸ்கர்: அ.தி.மு.கவை மக்கள் தூக்கிவீசும் காலம் நெருங்குவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்!