Tamilnadu

“100% தியேட்டர்கள் செயல்பட அனுமதித்தது தற்கொலைக்கு சமம்”: எடப்பாடியின் அறிவிப்பால் கொதிக்கும் மருத்துவர்!

கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதியில் இருந்து திரையரங்குகள், கடற்கரை, நீச்சல் குளம், படப்பிடிப்புகள் என அனைத்து விதமான கேளிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை நவம்பர் மாதம் வரை நீடித்தது.

அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நவம்பர் 10ம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசனின் ஈஸ்வரன் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இதுவரை 50 சதவிகித இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வந்த திரையரங்குகளை 100 சதவிகித இருக்கைகளுடன் இயக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்ததோடு, பொங்கல் பண்டிகை முதல் தமிழகத்தில் உள்ள 1,112 திரையரங்குகளும் முழுமையாக செயல்படும் என்றும் கூறியுள்ளார்.

இது விஜய் மற்றும் சிம்புவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் புதிய வகை வீரியமிக்க கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் முழுமையாக திறக்கப்படுவது சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்களிடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் தியேட்டர்கள் முழுமையாக செயல்படுவதற்கு அரசு அனுமதித்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

அதில், “அன்புள்ள விஜய், சிம்பு மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அரசே, நான் உட்பட ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார, தூய்மை பணியாளர்கள் என அனைவரும் இந்த கொரோனா தொற்றால் கடுமையாக அயர்ச்சியடைந்துள்ளோம்.

எங்கள் முன் கேமராக்கள் இல்லை. நாங்கள் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவதில்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கு மூச்சு விடுவதற்கு சற்று நேரம் தேவைப்படுகிறது. இந்த பெருந்தொற்று இன்னும் முற்றுப்பெறவில்லை. அப்படி இருக்கையில் திரையரங்குகள் முழுமையாக செயல்படுவதற்கு அனுமதி அளித்துள்ளது தற்கொலை செய்துகொள்வவதற்குச் சமம்.

எந்த ஹீரோவும் மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் அமர்ந்து படங்களை பார்க்கப்போவதில்லை மாறாக சாமானிய மக்களே அங்கு கூட்டங்களாக இருப்பர். பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகம் செய்யும் பண்டமாற்று முறையாக உள்ளது இது.

இந்த தொற்று நோயில் இருந்து நிம்மதியை பெறுவதற்கு மெதுவாக முயற்சி செய்து வாழ்வில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய முடியுமா? ஏனெனில் அது இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.

இப்படிக்கு சோர்வடைந்த மருத்துவர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: மாற்றி மாற்றி விமர்சித்துக் கொள்ளும் இந்தியா-ஆஸ்திரேலியா : கொரோனா சூழலில் பொறுப்புணர்வு அவசியமில்லையா?