Tamilnadu

“தி.மு.க கூறும் புகார்களை தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது” : ஊடகங்களை மிரட்டும் அ.தி.மு.க!

தமிழகம் 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தமிழகம் 10 ஆண்டுகளாக அனுபவித்து வந்த அவலங்களுக்கு முடிவு கட்டும் நோக்கில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலின் படி, தி.மு.க தனது தேர்தல் பணிகளை முனைப்புடன் செய்து வருகிறது.

குறிப்பாக ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அ.தி.மு.க அரசின் தோல்விகளை கிராமங்கள் தோறும் அம்பலப்படுத்தி வருகிறார்.

அதேபோல், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ மற்றும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் என தி.மு.க நிர்வாகிகள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அ.தி.மு.கவின் ஊழல்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து வருகின்றனர்.

மேலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியலையும், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் வழங்கி நடவடிக்கை எடுக்க வழியுறுத்தப்பட்டது. தி.மு.கவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு எழுந்துள்ள நிலையில், தி.மு.க தலைவரின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் ஆளும் அ.தி.மு.க திணறிவருகிறது.

இந்நிலையில் தி.மு.கவினர் மக்களை சந்திக்கக் கூடாது என தி.மு.கவின் கூட்டத்திற்கு தடைவிப்பதும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் மீது வழக்குப் பதிவு செய்வது போன்ற அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளை எடப்பாடி அரசு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே எதிர்கட்சிகளை மிரட்டி வந்த அ.தி.மு.க அரசு, தற்போது ஊடகங்களுக்கு மிரட்டல் விடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

“அ.திமு.க அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் புகார்களை டி.வி, பத்திரிக்கைகளில் வெளியிடக்கூடாது” என்று அனைத்து ஊடகங்களுக்கும் அ.தி.மு.க சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மீறி வெளியிட்டால் வழக்கைகளை சந்திக்க நேரிடம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அ.தி.மு.க அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: “தி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டால் ரூ.2500 வழங்கமாட்டோம்” : நரிக்குறவர் சமூக மக்களை மிரட்டும் அ.தி.மு.க!