Tamilnadu

“பாடப்புத்தகங்களை எடைக்கு போடும் எடுபிடி அரசு, பேரிச்சம்பழத்துக்கு கூட தேறாது” - உதயநிதி ஸ்டாலின் சாடல்!

கொரோனா ஊரடங்கு காலமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் முழுமையாக செயல்படாத நிலையில், மாணவர்கள் ஆன்லைன் வழியே பாடங்களை படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களுக்கு இந்தாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல மாவட்டங்களில் பாடப்புத்தகங்களை முறையாக மாணவர்களுக்கு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், மயிலாடுதுறை அருகே பழைய இரும்புக் கடையில் பண்டல் பண்டலாக தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் முத்து வக்கீல் சாலையில், பெருமாள்சாமி என்பவர் பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கொட்டிக் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கும், கல்வித்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த பழைய இரும்புக்கடைக்குச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது, நடப்பு கல்வி ஆண்டிற்கான தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பண்டல் பண்டலாக கட்டிக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, வருவாய்த்துறையினர் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலிஸார் கடையின் உரிமையாளர் பெருமாள்சாமியை கைது செய்து விசாரணை நடத்தினார்.

அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு, மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் புத்தகங்கள் பிரிவில் பணியாற்றும் மேகநாதன் என்பவரும் உடந்தை என்று அவரையும் அழைத்து வந்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மாணவர் சங்க நிர்வாகி அமுல் காஸ்ட்ரோ கூறுகையில், “கல்வித் துறையை சார்ந்தவர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகிறது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகத்தை உரிய காலத்தில் வழங்காமல், காசுக்காக பழைய இரும்பு கடையில் போடப்பட்டுள்ளது பெரும் வேதனையை அளிக்கிறது.

பல மாணவர்களுக்கு இன்னும் முறையாக புத்தகம் சேரவில்லை. இந்த சூழலில் மாணவர்களின் நலன் கருதி விலையில்லா புத்தகங்களை பழைய இரும்புக் கடையில், விற்பனை செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். எனவே உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “நடப்பு கல்வி ஆண்டின் 50,000 பள்ளி பாடப்புத்தகங்கள் மயிலாடுதுறையில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் போடப்பட்டுள்ளன. 'நீட், புதிய கல்வி கொள்கை எல்லாம் வருவதால் இனி மாணவர் யாரும் படிக்க மாட்டார்கள்' என புத்தகங்களை பழைய இரும்புக்கடையில் போடச்சொல்லி U-turn அமைச்சர் கட்டளையிட்டாரா?

நம் மாணவர் முன்னேற அவர்கள் கையில் புத்தகங்களை கொடுத்தது கழக அரசு. அதைப்பிடுங்கி பழைய இரும்புக்கடையில் போட்டிருக்கிறது அடிமை அரசு. அடிக்கும் கொள்ளை போதாது என பாடப்புத்தகத்தை எடைக்கு போடும் இந்த எடுபிடி அரசு, பேரிச்சம்பழத்துக்கு கூட தேறாது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னையில் காரில் சுற்றியபடியே கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய மொத்த வியாபாரி..20 கிலோ கஞ்சா பறிமுதல்!