Tamilnadu

“ரூ.13 ஆயிரத்துக்கு பதில் 3.85 லட்சம் கட்டணம்” : ஈரோட்டில் கல்லூரி திறந்த முதல் நாளே மாணவர்கள் போராட்டம்!

கொரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த 8 மாதங்களுக்குp பிறகு கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இன்று திறக்கப்பட்ட நிலையில், அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் இறங்கினர்.

கல்லூரி வாயிலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போராட்டம் குறித்து அக்கல்லூரியைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர் ஒருவர் கூறுகையில், “இந்தக் கல்லூரி முன்பு போக்குவரத்து கழகத்தினுடைய கல்லூரியாக செயல்பட்டுவந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கல்லூரியை மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசு மாற்றியது.

இந்நிலையில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போதுவரை அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல், கூடுதல் கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூல் செய்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டுக்காண கல்விக்கட்டணம் ரூ.13,620 மட்டுமே வசூலிக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்த கல்லூரி மாணவர்களிடம் ரூ.3.85 லட்சம் வசூலிக்கப்படுகிறது.

இதனைக் கண்டித்து பல முறை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இதுவரை எந்த வித கட்டண குறைப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியின்றித் தவிக்கிறோம். எனவே அரசு கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க!