Tamilnadu

கந்து வட்டிக்கு பயந்து தந்தை தற்கொலை..தவறுதலாக விஷம் கலந்த ஜூஸை குடித்த மகளும் பலி..விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா நாகந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யப்பன் (42). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விவசாய பணிக்காக நாகந்தூரில் டீக்கடை நடத்தி வரும் ராஜசேகர் (42) என்பவர் மூலமாக திண்டிவனம் இடையன்குளம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரிடமிருந்து வெற்று பத்திரத்தில் கையெழுத்து போட்டு ரூபாய் 25,000 கடன் பெற்றுள்ளார்.

இந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூபாய் 50,000 கொடுக்க வேண்டும் இல்லையென்றால் பத்திரத்தில் ரூபாய் 2 லட்சம் என எழுதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உன்னுடைய சொத்துக்களை ஜப்தி செய்து கொள்வேன் என அய்யப்பனிடம் இருவரும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

Also Read: கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி... கைவிட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் - சென்னையில் பரிதாபம்!

இதனால் அதிர்ச்சியடைந்த அய்யப்பன் கடந்த 20ம் தேதி மாலை 5 மணிக்கு தனது வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வெளியில் வந்து வாந்தி எடுத்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது இரண்டாவது மகள் ஆர்த்தீஸ்வரி (7) விஷம் கலந்திருப்பது தெரியாமல் மீதமிருந்த குளிர்பானத்தை குடித்து மயங்கினார்.

இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அய்யப்பன், அவரது மகள் ஆர்த்தீஸ்வரி இருவரும் இறந்தனர். இது பற்றி பெரியதச்சூர் போலீசில் மனைவி மங்கையர்கரசி கொடுத்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் குற்றவாளிகள் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிந்து ராஜசேகரை கைது செய்து காவலில் வைத்தனர்.

இந்நிலையில் இன்று மாலை மருத்துவமனையில் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரியும், அவர்கள் மீது கந்து வட்டி வழக்கு பதிவு செய்ய கோரியும் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்தனர். தகவலறிந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் பைனான்ஸ்சியரை நாளை கைது செய்வோம் என வாக்களித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Also Read: இளைஞர் தீக்குளிக்க முயற்சி : அடியாட்களுடன் கந்துவட்டி கொடுமை செய்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு!