Tamilnadu

“இடம் கிடைத்தும் பொருளாதாரத் தடையால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாதவர்களுக்கு உதவுக” : கி.வீரமணி

அரசுப் பள்ளிகளில் படித்து ‘நீட்’ எழுதிய இருபால் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடம் கிடைத்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்டணச் சுமையைத் தாங்க முடியாமல், கைபிசைந்து நிற்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு ஏற்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

அரசு பள்ளிகளில் படித்த பிளஸ் டூ மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் அளித்திருப்பது - நல்ல பலன்களை அடைந்துள்ளது. இவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இருபால் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத இந்த இருபால் மாணவர்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டணத்திற்கும் - தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விதிக்கப்பட்ட கட்டணங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடாகும்.

தையற் தொழிலாளியின் மகன், பெயிண்டருடைய மகள் - வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் மகள் போன்றோர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாயை செலுத்தும் நிலையில் இல்லாத ஒரு சூழலில், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்புக் கிட்டியும் இவ்வளவு பெருந்தொகையை செலுத்தும் நிலையில் இல்லை.

இந்த சோகத்திலிருந்து இந்த ஏழை பாழைகளை மீட்கும் கடப்பாடு அரசுக்கு முக்கியமாக - கண்டிப்பாக - இருக்கவே செய்கிறது.

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு (மாத வருவாய் ரூ.65,000 ஈட்டுவோர் ஏழைகளாம்!) உதவி செய்யும் நிலையில் - இந்த அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு இருகரம் நீட்டி உதவிட முன்வரவேண்டும் - அதுதான் உண்மையான சமூகநீதி!

தமிழ்நாடு அரசு இதனை முக்கியமாகக் கருதி, இடம் கிடைத்தும் பொருளாதாரத் தடையால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்ட இருபால் மாணவர்களையும் கை கொடுத்துத் தூக்கவேண்டும்!சமூகநீதியில் இது மிகவும் முக்கியமான அம்சமே!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Also Read: “பதவி சுகத்திற்காக தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை காவு கொடுத்த முதல்வர் பழனிசாமி”- தங்கம் தென்னரசு சாடல்!