Tamilnadu

“கிரிக்கெட்டை வைத்து மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள்” - உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி, வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

Play games தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், dream 11 விளையாட்டில் கிரிக்கெட்டிற்காக விளம்பரம் கொடுப்பவர்களை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா? கிரிக்கெட் அணிகளில் மாநில பெயரை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதனை பயன்படுத்தவில்லை எனில் யாரும் கிரிக்கெட்டை பார்க்க மாட்டார்கள். முற்றிலுமாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, தவறாக வழிகாட்டி, மக்கள் பார்க்க வைக்கப்படுகிறார்கள். மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் என தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: ஆன்லைன் ரம்மியில் புழங்கும் ரூ.25,000 கோடி : “இது எங்கு செல்கிறது? யார் கணக்கில் உள்ளது?” - ஐகோர்ட் கிளை