Tamilnadu

“கரூரில் விளம்பர தட்டிகள் வைத்ததில் தகராறு” : அ.தி.மு.க-வினர் தாக்கியதில் தி.மு.க ஆதரவாளர் பலி!

கரூர் மாவடியான் கோவில் தெருவில் விநாயகர் கோயில் ஒன்றின் குடமுழுக்கு நேற்று நடந்துள்ளது. இதற்காக தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் விளம்பர தட்டிகள் வைத்து உள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை தி.மு.க ஆதரவாளர் பிரபாகரன் என்பவர் வைத்த வரவேற்பு விளம்பர பதாகைகளை அ.தி.மு.க-வைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் கிழித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதை தட்டி கேட்ட தி.மு.க-வை ஆதரவாளர் பிரபாகரன் (55) மற்றும் இவரது மகன் வழக்கறிஞர் விக்னேஷ் ஆகிய இருவரை அ.தி.மு.க நகர மகளிர் அணி பொறுப்பாளர் கவிதா சீனிவாசன் மகன் நந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள சிலர் அரிவாள் மற்றும் கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில், காயம் அடைந்த பிரபாகரன் தனது மகன் வழக்கறிஞர் விக்னேஷ் மூலம் கரூர் நகர காவல் நிலையத்திற்கு அலைபேசி மூலம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகாரை போலிஸார் ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு சென்ற வழக்கறிஞர் விக்னேஷ் மீது அ.தி.மு.க-வினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த விக்னேஷ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.கவினரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரபாகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.

ஆனால், துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் மற்றும் நகர காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் புகார் மனுவை திரும்ப பெற மறுத்து விட்டனர். இதையடுத்து அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் சென்று உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்

“கரைவேட்டி கட்டாத அ.தி.மு.க நிர்வாகிகளாக போலிஸார் செயல்பட்டு வருகிறது” என அண்மையில். தி.மு.கவினர் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: யானை தாக்கி உயிரிழந்த பாகனின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ!