Tamilnadu

காடா துணியிலான மாஸ்க் எப்படி கொரோனா கிருமியை தடுக்கும்? முகக்கவச டெண்டரில் முறைகேடு - திமுக MLA சாடல்!

முகக்கவச டெண்டரில் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு தரமற்ற முகக் கவசங்கள் அளித்து தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தனது இளைய மகன் சு.அன்பழகன் மறைந்து 11 நாட்கள் ஆனதை முன்னிட்டு 5 மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் 25,000 முகக்கவசங்களை மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பேரிடர் காலத்தில், தொற்று ஏற்படாமல் விடுபட முக்கியமாக முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஐந்து முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக N95 என்ற முக கவசமும், அப்படி இல்லை என்றால் சர்ஜிகல் மாஸ்க், அடுத்ததாக பனியன் துணியினால் ஆன முகக்கவசம் அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த மூன்றில் ஏதாவது ஒன்றையாவது தமிழக அரசு கொடுத்து இருக்கலாம். ஆனால் மிகவும் தரமற்ற காடா துணியில் தைக்கப்பட்ட முகக்கவசத்தையே அரசு மக்களுக்கு தந்துள்ளது. அதுவுமே ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

கண்ணுக்குப் புலப்படாத நானோமீட்டர் எனக் கூறப்படும் நுண்ணிய கிருமி எப்படி இந்த காடா துணியினாலான முகக்கவசம் தடுக்கும். பெரிய கொசு கூட சுலபமாக நடந்து விடும் அளவிற்கு தரமற்ற கவசமாக இருக்கிறது. காடா துணியினால் ஆன தரமற்ற முகக்கவசத்தின் விலை கேட்ட போது வெறும் முப்பது காசு என்று தெரிவித்தனர்.

ஆனால், டெண்டரில் ஒரு முக கவசம் 6 ரூபாய்க்கு வாங்கபட்டதாக கணக்குக்காட்டி மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது. சமூக ஆர்வலர்கள் உண்மை தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக்காலம் வருவதற்கு முன்னரே தி.மு.க ஆட்சிக்காலத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது ஜூன் மாதங்களிலேயே பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலை துறையினர் அனைவரையும் அழைத்து மழை கால்வாய்களை தூர் வாரி தாழ்வான இடங்களை சீர் செய்யும் பணி முடிவடைந்து மக்களுக்கு எந்த பிரச்சனை வராமல் இருக்கும்.

ஆனால் தற்போது முதலமைச்சர், பெயருக்கு 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஒரே ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைக்காமல் மழைக்காலம் வந்தபின் ஆலோசனை கூட்டம் நடத்துவது ஒரு ஏமாற்று வேலை.

கடலோர காவல்படை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை , பொதுப்பணித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசினால் மட்டுமே இதற்கான தீர்வு சரியாக இருக்கும். தி.மு.க ஆட்சி காலத்தில் மழைநீர் வடிகால் கட்டுவது , ஜவஹர்லால் நேரு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,447 கோடி ரூபாய் மாநகராட்சி பணிகள் தொடங்கப்பட்டது.

Also Read: ஊழல்களில் எடப்பாடியாருக்கும் பொறுப்பு என்று பகிரங்கமாக அறிவிக்கிறாரா வேலுமணி? - மா.சுப்பிரமணியன் அறிக்கை!