Tamilnadu

முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மனைவி ராஜாமணி தங்கபாண்டியன் மறைவு: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் தி.மு.க அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியும், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் (வயது84) உடல்நலக்குறைவு காரணமாக சற்றுமுன் காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு: -

முத்தமிழறிஞர் கலைஞருக்கு தென் மாவட்டங்களில் “போர் வீரராக” விளங்கிய, மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களின் மனைவி திருமதி. ராஜாமணி தங்கபாண்டியன் உடல் நலிவுற்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த தங்கபாண்டியன் அவர்களுக்குக் கழகப் பணியிலும் - அவரது பொதுப்பணியிலும் உற்ற துணையாகவும் - உறுதிமிக்க இல்லத்தரசியாகவும் விளங்கியவர். நான் விருதுநகர் மாவட்டத்திற்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் - அவரைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளேன். அவரும் பெற்ற அன்னையைப் போன்று என் மீது பாசமழை பொழிந்து, நலம் விசாரித்து எனக்கும் என் குடும்பத்திற்கும் அன்பின் இமயமாகத் திகழ்ந்தவர்.

இன்று கழகப் பணிகளில் எனக்குத் துணையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு - தென் சென்னை மக்களவை உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வளர்த்தெடுத்து - ஆளாக்கி ஒருவர் சட்டமன்றத்திலும், இன்னொருவர் நாடாளுமன்றத்திலும் மக்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை முழுக்க முழுக்க திருமதி. ராஜாமணி தங்கபாண்டியன் அவர்களையே சாரும். அவரது மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.

அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் தங்கம் தென்னரசு, அன்புச் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.