Tamilnadu

ஒரே மாவட்டத்தில் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்த 80,737 மனுக்களில் 70,709 பேர் போலி : 6 பேர் கைது!

மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கியதில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் முறைகேடாகப் பணம் பெற்றது தெரியவந்ததையடுத்து இந்த மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் கிசான் நிதி உதவி திட்டத்தில் 80,737 பேர் இனைந்ததையடுத்து இதில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 3 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இந்த கிசான் விவசாய திட்டத்தில் வேலை செய்யத் தகுதி இல்லாத 10 ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 13 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடலூர் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்காகக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 80,737 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வேறு மாநிலம் மற்றும் மற்ற மாவட்டத்தைச் சேர்ந்த மனுக்கள் 35,231 ஆகும்.

இந்த மனுக்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் அதில் மொத்தம் 70,709 பேர் விவசாயிகள் என்று போலியாக விண்ணப்பித்து இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மொத்தம் இதில் 3,483 பேர் மட்டுமே உன்மையான விவசாயிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக வேளாண் அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கடலூர் மாவட்டம் திருத்துறையை சேர்ந்த தனுஷ் (வயது 33), கண்டரக்கோட்டையை சேர்ந்த குமரகுரு (48), அக்கடவல்லியை சேர்ந்த அழகேசன் (53), கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலிஸார் கைது செய்தனர். இதில் தனுஷ் மற்றும் எலவரன்கோட்டையை சேர்ந்த ஒருவர் கம்ப்யூட்டர் மையம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையில் இதே தம்பதியர் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் சேர்ந்து ரூ.14 கோடியே 26 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 5 கோடியே 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கிசான் திட்ட மோசடி ஆளும்கட்சியின் அரசியல் தலையீடு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று பொதுமக்கள் கருதும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதுபோல இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-யிலிருந்து சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அப்போதுதான் யார் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்ற உண்மை வெளிவரும்.

Also Read: கிசான் திட்ட மோசடியில் ஆளுங்கட்சிக்கும் பங்கு? வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொன்முடி வலியுறுத்தல்!