Tamilnadu

“ஆன்லைன் வகுப்பால் அதிகரிக்கும் மாணவர் மரணங்கள்” : ஆன்லைன் வகுப்பு புரியாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன். இவருடைய மகன் விக்கிரபாண்டி (16) திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரபாண்டி கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான கரட்டுப்பட்டியிலிருந்து ஆன்லைன் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே மாணவன் விக்கிரபாண்டி அவரது அப்பா இளங்கோவனிடம் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று தெரிவித்தது மட்டுமல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை புறக்கணித்து வந்துள்ளார். இதற்கு தந்தை இளங்கோவன் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவன் விக்கிரபாண்டி இன்று அதிகாலை 7.30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் அவரது பெற்றோர்கள் மாணவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கு மாணவன் விக்கிரபாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆன்லைன் வகுப்பில் சரிவர படிக்காத காரணத்தினால் தந்தை திட்டியதால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கானாவிலக்கு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதேபோன்று கடந்த மாதம் 18ம் தேதி ஆண்டிபட்டி காமராஜர் தெருவை சேர்ந்த 10 வகுப்பு பயிலும் அபிசேக் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிட்டதக்கது.

Also Read: “ஆன்லைன் வகுப்பால் தொடரும் உயிர்பலி”: 3 பேருக்கும் ஒரே செல்போன்; சகோதரிகளுக்குள் தகராறு - ஒருவர் தற்கொலை!