Tamilnadu

“ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கு : மதச் சாயம் பூசி கலவரத்தை தூண்டும் பா.ஜ.க” : அம்பலப்படுத்திய காவல்துறை!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுவாமிநாதனின் மகன் அருண் பிரகாஷ். இவர் தினக்கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் அருண் பிரகாஷ், திங்கட்கிழமை மாலையில் அவருடன் பணியாற்றும் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரனை சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அருண் பிரகாஷையும், யோகேஸ்வரனையும் சரமாரியாக வெட்டி உள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்திய கும்பலை விரட்டியதில் அவர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போலிஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் போலிஸார் விசாரணை நடத்தி கொலைக்கான உண்மை காரணம் என்ன என்பதைப் பற்றி அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த கொலை வழக்கை கையில் எடுத்த பா.ஜ.க இது மத பயங்கிரவாதிகளால் நடத்தப்பட்ட கொலை என அருண் கொலை வழக்கிற்கு மதச் சாயம் பூசத் தொடங்கினர்.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., மதக் கலவரங்களை உருவாக தொடர்ச்சியாக முயன்று வருகிறது. குறிப்பாக இந்த பிரச்சனையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என மதத்தை குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க மாநில துணை செயலாளர் வானதி சீனிவாசன், யூட்யூபர் மாரிதாஸ் என பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல்கள் இந்த கொலைக்கு மதச் சாயம் பூசி பதிவிட்டு மதக் கலவரத்தை ஏற்பட்டத்த முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர்களின் இந்த வன்முறையைத் தூண்டும் கருத்து சமூக வலைதளங்களில் அதிகம் பரவியதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, “ராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31ஆம் தேதியன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்னை ஏதுமில்லை” என்று அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் காவல்துறை அளித்துள்ள தகவலில், “நண்பர்களான அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் இருவரும், முன்விரோதம் காரணமாக திங்கட்கிழமை நண்பகல் 12 மணி அளவில் வைகைநகரைச் சேர்ந்த சரவணன் நாகநாதபுரத்தைச் சேர்ந்த சபிக், ரகுமான் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சரவணன், சபிக் மற்றும் ரகுமான் ஆகியோர் லெப்ட் ஷேக் என்ற நண்பரின் உதவியுடன் அருண்பிரகாஷ் மற்றும் யோகேஷ்வரனிடம் திங்கட்கிழமை மாலை மீண்டும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் பயங்கர ஆயுங்களுடன் சரமாரியாக வெட்டிக்கொன்றதாக தெரிகிறது.

இதில் லெப்ட் சேக் உடன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்ரான்கான், சரவணன், வெற்றி, சதாம், ஹக்கிம், வாப்பா என்ற ரஷீக், அசார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட்டோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தற்போது முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ், சாகுல் ஹமீது ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இந்த கொலை வழக்கில் லெப்ட் சேக், சதாம், அஜீஸ், காசிம் ரஹ்மான் ஆகிய 4 பேர் திருச்சி லால்குடி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்த கொலை முன்விரோதத்தால் நடந்ததாகவே தெரிகிறது. ஆனால் இதனை மத வன்முறை என மக்களிடையே மத பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பொதுத்தளத்தில் கருத்துத் தெரிவித்த ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், மாரிதாஸ் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: சித்தாவிலேயே தகுதியானவர்கள் உள்ளபோது ஆயுர்வேதம் படித்தவரை நியமித்தது ஏன்? : மோடி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!