Tamilnadu

“உள்ளே வைத்து வீட்டை பூட்டிய மாநகராட்சி ஊழியர்கள்”: மன உளைச்சலில் மூதாட்டி தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி!

சேலம் அன்னதானப்பட்டியில் 72 வயது மூதாட்டி சாந்தா என்பவரும், அவரது மகளும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 9ம் தேதி சாந்தாவின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது எனக்கூறி அவரை சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிறப்பு பிரிவில் அனுமதித்துள்ளனர்.

மேலும், அவரது 72 வயதுடைய சாந்தாவிடம் பரிசோதனை மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, தனிமைப்படுத்துதல் எனும் பெயரில் யாரும் இல்லாத அந்த வீட்டிற்கு உள்ளேயே வைத்து கதவை வெளியில் பூட்டு சாவியை எடுத்துச்சென்றுள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள்.

அடுத்த நாள் பரிசோதனை முடிவு வந்ததில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டும் அவரது வீடு திறக்கப்படவில்லை. யாரும் துணைக்கு இல்லாமல் வீடு வெளியே பூட்டப்பட்டு சுமார் 4 நாட்கள் இருந்துள்ளார்.

கடந்த ஜூலை 13ம் தேதி அவரை தொடர்புகொண்டபோது போன் தொடர்ந்து எடுக்கப்படாததால் உறவினர்கள் பயந்துபோய் மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி கெஞ்சி சாவியை வாங்கி வீட்டை திறந்துள்ளனர்.

தனிமைப்படுத்தி வீடு வெளியே பூட்டப்பட்ட அச்சத்தில், மிகக் கடுமையான மன உளைச்சலடைந்த 72 வயது மூதாட்டி உயிரற்று தூக்கில் பிணமாக தொங்கிக் கிடந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி ஊழியர்களே, தனிமைப்படுத்தல் என்ற பெயரில் சரியான வழிகாட்டுதல் இன்றி அலட்சியமாகச் செயல்பட்டு, மூதாட்டியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாக அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “உயிரிழந்த தகவலையே தெரிவிக்காமல் அலைக்கழித்த கொடுமை”- மருத்துவமனை அலட்சியத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி!