Tamilnadu

“ஒப்பந்தங்கள் விடுவதில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக முறைகேடு” - தி.மு.க உள்ளாட்சி பிரதிநிதிகள் புகார்!

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவர்கள் குற்றம்சாட்டி புகார் மனு அளித்துள்ளனர்.

மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.கவைச் சேர்ந்த ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் புகார் மனு அளித்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியக் குழுக்களின் தலைவர்களாக தி.மு.கவினர் உள்ளனர். இதனால், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்தப்புள்ளிகளை விடுவதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர்கள் அனுமதிக்காமல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அலுவலகத்திலேயே வைத்து முடிவு செய்கின்றனர்.

ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து மாவட்ட ஊராட்சித் தலைவருக்கோ, ஒன்றியக் குழு தலைவர்களுக்கோ தகவல் தெரிவிப்பதில்லை. ஆளுங்கட்சியினருக்கு ஆதரவான முடிவை எடுக்கும் நோக்கிலேயே இதுபோன்று அரசு அலுவலர்கள் செயல்படுகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “மின்கட்டணம் என மக்களின் பணத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி அமைச்சருக்கு”-ஆதாரங்களுடன் செந்தில்பாலாஜி பதிலடி!