Tamilnadu

“எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை; இன்று மட்டும் 2,710 பேர் பாதிப்பு” - விஜயபாஸ்கர் தகவல்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு தொற்று இல்லை எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் இதுவரை மொத்தம் 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் 55 சதவீதமாக உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்தது. சென்னை மருத்துவக் கல்லூரி டீன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 58 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்த பாதிப்பு 62,087 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 26,592 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 9,19,204 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று அரசு மருத்துவமனையில் 30 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 37 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 27,178 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Also Read: “உச்சநீதிமன்ற கட்டளைகளையாவது பின்பற்றி கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திடுங்கள்!” : மு.க.ஸ்டாலின்